
கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச பாடசாலையை அமைப்பதற்கான ஆர்வத்தை பிரித்தானிய சுயாதீன பாடசாலைகள் வெளிப்படுத்தியுள்ளன
February 6, 2023 05:25 pm
மூன்று முன்னணி பிரித்தானிய சுயாதீன பாடசாலைகளின் சிரேஷ்ட தூதுக்குழுக்கள், கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச பாடசாலையொன்றை அமைப்பது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக,
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தின் சிரேஷ்ட
முகாமைத்துவத்துடன் கலந்துரையாடுவதற்காக, இம்மாத தொடக்கத்தில் கொழும்பு துறைமுக
நகரத்துக்கு விஜயம் செய்தனர்.
இந்த பாடசாலைகள் 16 ஆம் நூற்றாண்டு வரை பின்செல்லும் ஒரு வளமான பாரம்பரியம் மற்றும்
கல்வியாளர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் சர்வதேச கூட்டாளர்களின் பல்வேறு
சமூகத்தின் பக்கபலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மேலும், மாணவர்களின் சிறந்த சாதனைகள்
மற்றும் Russell Group இல் உள்ள மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் நுழைவு அனுமதி மூலம் இணை
பாடத்திட்ட நடவடிக்கைகள் மற்றும் கல்வி செயல்திறன் ஆகியவற்றில் இவை சிறந்து விளங்குகின்றன.
கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள சர்வதேச பாடசாலையானது, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பா
போன்றவற்றில் உள்ள விடுதிப் பாடசாலைகளில் தமது பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கும் தெற்காசிய
பிராந்தியத்தின் செல்வந்த சமூகத்தை ஈர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளுடன் சர்வதேசமயமாக்கல் மீது
இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பை நிரூபிப்பதாக அமையும். கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள
பாடசாலை மாணவர்களுக்கான சிறந்த கல்வி, வசதிகள், ஆசிரியர்கள் மற்றும் சர்வதேச அனுபவத்தை
உறுதி செய்ய பெற்றோர் பாடசாலையுடன் நெருக்கமாக ஒத்துழைக்க முடியும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்காசியாவிற்கான உலகத் தரம் வாய்ந்த நகரமாக, கொழும்பு துறைமுக நகரமானது நகர்ப்புற
வசதிகள் மற்றும் சர்வதேச கல்வி மற்றும் சுகாதார சேவைகள் போன்ற சமூக உள்கட்டமைப்புகளை
வழங்கும் வகையில், ஒரு சேவை சார்ந்த விசேட பொருளாதார வலயமாக, நிலைபேற்றியல் சார்ந்த
மூலோபாயங்களின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையின் இறையாண்மை பிரதேசத்தில் 2.69 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை சேர்த்துள்ள
கொழும்பு துறைமுக நகரம், இலங்கையின் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டு நிதியுடனான
அபிவிருத்தித் திட்டமாகும். இத்திட்டம் முடிவடைந்தவுடன் மொத்த முதலீடு 15 பில்லியன் அமெரிக்க
டொலர் ஆக அமையும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்
தொகையானது கொழும்பு துறைமுக நகரத்தில் ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கட்டடங்களில் நிர்மாணப் பணிகளின் கட்டத்தில் மேலும் 1.5 பில்லியன் டொலர் தொகை முதலீடு
செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒழுங்கு விதிமுறைகள் தொடர்பான ஏற்பாடுகள் பூர்த்தி
செய்யப்பட்டவுடன் இப்பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7 மில்லியன் அமெரிக்க
டொலர் தொகை மதிப்பிலான தீர்வையற்ற அங்காடி வளாகமானது தெற்காசியாவிலேயே இந்த
வகையில் முதன்முறையானதாக அமைந்துள்ளதுடன், கொள்வனவு மற்றும் சுற்றுலாவுக்கான
ஈர்ப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2023 ஏப்ரலில் கொழும்பு துறைமுக நகரத்தில்
திறந்து வைக்கப்படவுள்ளது.