
வரலாற்றில் பதிவாகியிருந்த அதி உயர்ந்த வரிக்கு முந்திய இலாபமான ரூ. 1.2 பில்லியனுடன் அமானா வங்கி...
March 18, 2023 07:42 am
கடுமையான இடர் முகாமைத்துவம் மற்றும் ஆளுகை அடிப்படைகளிலமைந்த மீட்சியுடனான வங்கியியல் மாதிரியைக் கொண்டியங்கும் அமானா வங்கி பிஎல்சி, சவால்கள் நிறைந்த
பொருளாதாரச் சூழலிலும், வரலாற்றில் சிறந்த சாதனை மிகுந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு
செய்திருந்தது.
2022 உடன் நிறைவடைந்த நிதியாண்டில், வங்கி ரூ. 1.21 பில்லியனை வரிக்கு முந்திய
இலாபமாக (PBT) பதிவு செய்திருந்தது. இலங்கை பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு
முகங்கொடுத்திருந்த காலப்பகுதியில், வங்கி முன்னைய ஆண்டில் பதிவாகியிருந்த வரிக்கு
முந்திய இலாபமான ரூ. 1.08 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 12% அதிகரிப்பைப் பதிவு
செய்திருந்தது. வங்கியின் மீண்டெழுந்திறன், வியாபார இயக்கம் மற்றும் மக்களை
மையப்படுத்திய பிரத்தியேகமான பெறுமதி வாய்ந்த முறைமைக்கு அதிகரித்துச் செல்லும்
வரவேற்பு போன்றன இதனூடாக பிரதிபலிக்கப்பட்டிருந்தது. வரிச் செலவுகள் ரூ. 256
மில்லியனிலிருந்து ரூ. 419 மில்லியனாக 64% அதிகரிப்பை பதிவு செய்திருந்தமையால்,
வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 788.2 மில்லியனாக பதிவாகியிருந்தது. இந்தப் பெறுமதி 2021
ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த ரூ. 824.7 மில்லியனை விட எல்லையளவு குறைவானதாகும்.
நிதிச்சேவைகளை வழங்கும் கட்டணங்களில் பெருமளவு உயர்வு ஏற்பட்டிருந்தமையைத்
தொடர்ந்து, வங்கியின் நிதிச்சேவைகள் மீதான வருமானமும் குறிப்பிடத்தக்களவு
அதிகரித்திருந்தது. 2021 ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த ரூ. 7.7 பில்லியனுடன்
ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டில், 58% வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ. 12.1 பில்லியனாக
காணப்பட்டது. அதேவேளை, வைப்புகள் துரித கதியில் மீள்-விலைக்குட்படுத்தப்பட்டிருந்தன.
இதனால், நிதிச்சேவை வழங்கல் செலவுகள் 2021 ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த ரூ. 3.4
பில்லியனுடன் ஒப்பிடுகையில் 115% இனால் அதிகரித்து ரூ. 7.3 பில்லியனாக
பதிவாகியிருந்தது. எவ்வாறாயினும், உறுதியான வருமான வளர்ச்சி காரணமாக, அமானா
வங்கிக்கு இந்த தாக்கத்தை சீர் செய்து கொள்ள முடிந்ததுடன், தேறிய நிதிச்சேவை வழங்கல்
வருமானமாக ரூ. 4.8 பில்லியனை 2022 ஆம் ஆண்டில் பதிவு செய்யவும் முடிந்தது. இது 2021
ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த ரூ. 4.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 12% அதிகரிப்பாகும்.
வெளிநாட்டு நாணயப் பரிமாற்றத்தில் தட்டுப்பாடு மற்றும் 2022 ஆம் ஆண்டின் பெருமளவான
காலப்பகுதியில் இறக்குமதி கட்டுப்பாடுகள் காணப்பட்ட போதிலும், அத்தியாவசியப்
பொருட்கள் இறக்குமதிக்கான வசதியளிப்பினூடாக, வங்கி தனது தேறிய தரகு மற்றும்
கட்டண வருமானத்தை ரூ. 750.3 மில்லியனாக பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டில்
பதிவாகியிருந்த ரூ. 401.9 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 87% அதிகரிப்பாகும். தேறிய
வர்த்தக வருமானம் ரூ. 864.7 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டில் இந்தப்
பெறுமதி ரூ. 155.1 மில்லியனாக பதிவாகியிருந்தது. பொருளாதார தளம்பல்களால் இலகுவில்
பாதிப்புறக்கூடிய வியாபாரங்களால் வங்கிக்கு எழக்கூடிய இடர்களிலிருந்து எழும் தாக்கத்தை
குறைத்துக் கொள்வதற்காக உயர் மதிப்பிறக்கதை ஒதுக்கியிருந்ததைத் தொடர்ந்து, வங்கியின்
தேறிய செயற்பாட்டு வருமானம் ரூ. 4.01 பில்லியனிலிருந்து 18% அதிகரிப்பை பதிவு செய்து
ரூ. 4.72 பில்லியனாக பதிவாகியிருந்தது.
2022 ஆம் ஆண்டின் சராசரி பணவீக்கம் 45% ஐ விட உயர்வாக காணப்பட்ட போதிலும்,
வங்கி தனது வருடாந்த செயற்பாட்டு செலவுகள் அதிகரிப்பை 16.4% ஆக
கட்டுப்படுத்தியிருந்தது. இதன் பெறுபேறாக, நிதிச் சேவைகள் மீதான VAT மற்றும் சமூக
பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கு முன்னரான செயற்பாட்டு இலாபத்தில் 20% வளர்ச்சியை வங்கி
பதிவு செய்து ரூ. 1.73 பில்லியனை எய்தியிருந்தது. முன்னைய ஆண்டில் இந்தப் பெறுமதி ரூ.
1.44 பில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கியின் திரண்ட வரிப் பங்களிப்பான ரூ. 948
மில்லியன் என்பது, வரிக்கு முந்திய வங்கியின் செயற்பாட்டு இலாபத்தின் 55% ஆக
பதிவாகியிருந்தது.
சந்தை திரள்வு கட்டுப்பாடுகள் மற்றும் சந்தையில் நிதிக்கு நிலவிய போட்டிகரத்தன்மைக்கு
மத்தியிலும், வங்கியின் வைப்பு இலாகா ரூ. 100 பில்லியன் எனும் பெறுமதியைக் கடந்து, 17%
அதிகரிப்புடன் ரூ. 112.5 பில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டில் இந்தப்
பெறுமதி ரூ. 96.1 பில்லியனாக காணப்பட்டது. வங்கியின் உறுதித்தன்மை மற்றும்
மீண்டெழுந்திறனில் வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது பிரதிபலிப்பதாக
அமைந்துள்ளது. நடைமுறைக் கணக்குகள் மற்றும் சேமிப்புக் கணக்குகளை (CASA) வங்கி
உறுதியான மட்டத்தில் பேணியிருந்தது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில் இவை 43% ஆக
காணப்பட்டன.
வாடிக்கையாளர் நிதியளிப்பு தொடர்பில் வங்கி முன்னெடுத்திருந்த செயற்பாடுகளினூடாக,
வங்கியின் முற்பணங்கள் பிரிவு 2021 ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த ரூ. 75.8 பில்லியனுடன்
ஒப்பிடுகையில் 10% அதிகரித்து ரூ. 83.1 பில்லியனாக பதிவாகியிருந்தது. உரிய காலத்தில்
வாடிக்கையாளர்களுடன் ஈடுபாடுகளை பேணியிருந்தமை மற்றும் வினைத்திறனான
வகையில் இலாகாக்களை பேணியிருந்தமையினூடாக, நிலை 3 மதிப்பிறக்க விகிதம் 2.1%
ஆக, சந்தையின் சராசரிப் பெறுமதியை விட குறைவாக அமைந்திருந்தது.
வங்கியின் மொத்த சொத்துக்கள் 16% இனால் அல்லது ரூ. 19.8 பில்லியனினால் அதிகரித்து
ரூ. 141.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் வங்கியின் ஒதுக்கங்களில் ஏற்பட்ட
அதிகரிப்பு பங்களிப்பு வழங்கியிருந்தது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட ஆண்டில் வங்கியின்
மொத்த மூலதன விகிதம் அதிகரிப்பு 15.8% ஆக பதிவாகியிருந்ததுடன், ஆகக்குறைந்த
ஒழுங்குபடுத்தல் தேவையான 12.5% என்பதைவிட உயர்வாக அமைந்திருந்தது.
வங்கியின் தொடர்ச்சியான இலாபகரத்தன்மை காரணமாக, அமானா வங்கி தனது 5ஆவது
வருடாந்த பங்கிலாபத்தை ரூ. 269 மில்லியன் பெறுமதியான மேலதிகப் பங்குகளை
பங்கிலாபமாக (Scrip Dividend) பங்கிலாப விளைவு வீதமான 3.4% உடன் வழங்கியிருந்தது.
வங்கியியல் துறை எதிர்நோக்கியிருந்த பல்வேறு பொருளாதார சவால்களுக்கு மத்தியில்,
தனது 2022 செப்டெம்பர் மாத மீளாய்வில் ஃபிட்ச் ரேட்டிங் அமைப்பினால், அமானா
வங்கியின் தேசிய நீண்ட கால தரப்படுத்தலை BB+ (lka) ஆக RWN புறத்தோற்றப்பாட்டுடன்
தரப்படுத்தப்பட்டிருந்தது. அழுத்தங்கள் நிறைந்த சந்தைச் சூழலில், வங்கியின் நிதிசார் உறுதித்
தன்மை மற்றும் கடந்த காலங்களில் உறுதியான அனைத்துப் பிரிவு வினைத்திறனை
வெளிப்படுத்தியிருந்தமையை இந்த தரப்படுத்தல் மீள உறுதி செய்திருந்தது.
2022 ஆம் ஆண்டுக்கான நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் அமானா வங்கியின் பணிப்பாளர்
சபைத் தலைவர் அஸ்கி அக்பரலி கருத்துத் தெரிவிக்கையில், “வருடம் முழுவதிலும் பல
சவால்களுக்கு முகங்கொடுத்திருந்த போதிலும், அமானா வங்கியின் நோக்கம், சுறுசுறுப்பான
செயற்பாடு மற்றும் பிரத்தியேகமான வியாபார மாதிரியுடன், உறுதியான வாடிக்கையாளர்
ஈடுபாட்டினூடாக, இதுவரையில் பதிவு செய்திருந்த உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு
செய்ய முடிந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். அண்மைக்
காலப்பகுதியில் இலங்கை எதிர்நோக்கியிருந்த பொருளாதாரச் சவால்கள் நிறைந்த சூழலில்,
இந்த பாராட்டுதலுக்குரிய சாதனையை வங்கி எய்தியுள்ளது என நான் கருதுகின்றேன்.
அமானா வங்கியினால் பின்பற்றப்படும் பிரத்தியேகமான வங்கியியல் மாதிரியினூடாக,
தொழிற்துறை எதிர்நோக்கும் பல சவால்களுக்கு வங்கியை வெளிப்படச் செய்யாமல்
பாதுகாப்பு கேடயமாக அமைந்திருந்ததுடன், பொருளாதார தளம்பல்களுக்கு எதிராக
வங்கியை மீண்டெழச் செய்திட வலுவூட்டியிருந்தது. எனது சக பணிப்பாளர்கள்,
முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும், எமது வாடிக்கையாளர்கள்
மற்றும் இதர பங்காளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
2022 ஆம் ஆண்டில் பெற்றுக் கொண்ட சாதனை மிகுந்த நிதிப் பெறுபேறுகளின்
அடிப்படையில் இயங்குவதற்கு அமானா வங்கி எதிர்பார்ப்பதுடன், விறுவிறுப்பான மற்றும்
புதிய எதிர்காலத்துடன் நகர்கையில், பல்வேறு சூழல்சார் இயக்கக்காரணிகளுடன் இணைந்து
செயலாற்றவும் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
அமானா வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான
மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “அமானா வங்கியைப் பொறுத்தமட்டில் பல
சவால்கள் நிறைந்த ஆண்டாக அமைந்திருந்தது. அந்த சவால்களுக்கு மத்தியிலும் வங்கி தனது
பெறுமதிகளை உறுதி செய்து இயங்கியிருந்ததுடன், தனது டிஜிட்டல் பிரசன்னத்தை
மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியிருந்தது. மக்களுக்கு நட்பான வங்கிச் சேவைகளை
வழங்குவது எனும் எமது கொள்கையின் பிரகாரம், எமது வாடிக்கையாளர்களுடன் ஆழமான
உறவுகளை நாம் கட்டியெழுப்பியிருந்ததுடன், இந்த அளப்பரிய சவால்கள் நிறைந்த
காலப்பகுதியில் அவர்களை வழிநடத்திச் செல்வதற்காக அவர்களின் தேவைகளை உணர்ந்து
நாம் செயலாற்றியிருந்தோம். இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் வங்கியை
வழிநடத்திச் செல்வதற்கு பணிப்பாளர் சபையின் வழிகாட்டல்கள் மற்றும் எமது ஊழியர்களின்
அர்ப்பணிப்பான செயற்பாடுகள் போன்றவற்றுக்கு இந்த பெறுபேறுகள் சிறந்த
எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. எமது பணிப்பாளர்கள், முகாமைத்துவம், ஊழியர்கள்,
பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பெறுமதி வாய்ந்த பங்காளர்களுக்கு நன்றி
தெரிவித்துக் கொள்கின்றேன். எமது மக்களுக்கு நட்பான வங்கிச் சேவை மாதிரி மற்றும் எமது
டிஜிட்டல் பிரசன்னத்தை விரிவாக்கம் செய்வதில் முதலீடுகள் மற்றும் பிராந்திய பிரசன்னம்
போன்றன எதிர்வரும் ஆண்டுகளில் அமானா வங்கியை மேலும் முன்னேற்றுவதற்கு
உதவியாக அமைந்திருக்கும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும்
நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும்
அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப்
பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது.
IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச்
சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக்
கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர்
எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா
வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. அமானா வங்கி எந்தவொரு
துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.